Nov 27, 2025 - 04:57 PM -
0
இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதால், அடுத்த சில நாட்களுக்கு தற்போதைய பலத்த மழையும் கடும் காற்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (27) பிற்பகல் முழு நாட்டையும் உள்ளடக்கிய விசேட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள நிலையில், இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ச்சியான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மி.மீ. இற்கும் அதிகமான மிகவும் பலத்த மழையும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ. இற்கும் அதிகமான மிகவும் பலத்த மழையும் பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் வீசும் மிகவும் பலத்த காற்றுடன், அவ்வப்போது மணிக்கு 80 கி.மீ. வரையிலான பலமான திடீர் காற்று வீசக்கூடும்.
பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

