Dec 3, 2025 - 05:29 PM -
0
'தித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அக்கைத்தொழில்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றை கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு இன்று (03) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் குறித்து அறிவிப்பதற்காக '0712666660' எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த தரவு கட்டமைப்புக்குத் தேவையான தகவல்களை, பாதிக்கப்பட்ட கைத்தொழிலதிபர்கள் இயலுமான விரைவில் வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்தலை இம்மாதம் 16 ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், www.industry.gov.lk அல்லது https://aid.floodsupport.org/business-impact ஆகிய இணையத்தளங்கள் ஊடாக தகவல்களை உள்ளிட முடியும்.
தேவையான ஒத்துழைப்புக்களை உங்களுக்குரிய பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல்களைச் சேகரித்ததன் பின்னர், கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்வதற்கும் அமைச்சு எதிர்பார்க்கின்றது.
அத்துடன், தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கைத்தொழில் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒன்றிணைந்து, கூட்டாகச் செயற்படுமாறு அனைத்து கைத்தொழிலதிபர்களிடமும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

