Dec 19, 2025 - 04:42 PM -
0
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் தம்சவம் வைத்திருந்த குற்றச்சாட்டில், மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சம்பத் மனம்பேரி இன்று (19) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவிக்கையில், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாலும், அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதாலும் சந்தேகநபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரினர்.
தற்போதுள்ள தடுப்புக்காவல் உத்தரவு முடிவடையும் எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து மேலும் 90 நாட்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவை வழங்குமாறும், அதற்குரிய ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதால் அதுவரை சந்தேகநபரைத் தடுத்து வைக்க உத்தரவிடுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
இதன்போது சம்பத் மனம்பேரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்துச் செயற்படுவதாகவும், மேலதிக தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை இன்றைய தினமே சமர்ப்பித்திருக்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.
எவ்வாறாயினும், விடயங்களை ஆராய்ந்த வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு, சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த வழக்கின் கீழ் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பியல் மனம்பேரி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

