Dec 23, 2025 - 11:25 PM -
0
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து, இன்று (23) வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திசைவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்குத் தெருவிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த வினோதா ஜெகநாதன் (வயது 71) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியை எனத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த பணிப்பெண் வெளியே சென்று திரும்பியபோது, இவரைக் காணாததால் தேடியுள்ளார். இதன்போது அவர் கிணற்றில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அயலவர்களுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பிரிவு பொலிஸாரும், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
--

