Dec 27, 2025 - 10:25 AM -
0
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய பகுதியில் பாதாள உலகக் குழு குற்றவாளி ஒருவரிடம் இருந்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழு தலைவனான 'மாகந்துரே மதூஷிடம்' நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.
இது குறித்த விசாரணைகளின் பின்னணியிலேயே முன்னாள் அமைச்சர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

