Jan 23, 2026 - 11:55 PM -
0
பாராளுமன்றத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரை சபைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 146 இன் கீழ், பாராளுமன்றப் பணியாட்டொகுதி ஆலோசனைக் குழுவில் இச்சம்பவம் குறித்து இன்று கலந்துரையாடப்பட்ட போதிலும், அது தொடர்பான விரிவான அறிக்கை முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
முழுமையான அறிக்கை இல்லாமல் எதிர்க்கட்சியினரால் இவ்விடயம் குறித்துக் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், தற்போது சபைக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணத்தில் இச்சம்பவம் தொடர்பான பரிந்துரைகள் மட்டுமே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, இவ்விடயம் குறித்து விவாதிப்பதற்கு முன்னதாக, அது பற்றி விரிவாகப் படித்துப் பார்ப்பதற்கு ஏதுவாக, முறையான முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது கேட்டுக்கொண்டார்.

