Jan 24, 2026 - 12:02 PM -
0
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி பெறாத இடத்தில் மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை (22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் பிரிவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, மணல் அகழ்வில் ஈடுபட்டுவிட்டு உழவு இயந்திரங்களில் தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் வீதியில் வைத்து மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டனர்.
இச்சோதனையின் போது, பாதுகாப்பு கவசங்கள் இன்றி பாதுகாப்பற்ற முறையில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் உட்பட 3 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதுடன், 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சம்மாந்துறை நீதவான் நூர்தீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது வழக்கை விசாரித்த நீதவான், சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றத்திற்காக மூவருக்கும் மொத்தமாக ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பெரேராவின் வழிகாட்டலில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

