Jan 26, 2026 - 02:38 PM -
0
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படத்திலிருந்து தான் விலகியமைக்கான உண்மையான காரணத்தை அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், லோகேஷ் கனகராஜ் கைவசம் வைத்திருந்த பல பாரிய திட்டங்களிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. குறிப்பாக ரஜினி மற்றும் கமல் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கவிருந்த திரைப்படத்தை லோகேஷ் இயக்கப்போவதில்லை என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ்:
"ரஜினி மற்றும் கமல் சார் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை முதலில் நான் இயக்குவதாகவே இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் ஒரு மென்மையான உணர்வுப் பூர்வமான கதையையே எதிர்பார்த்தார்கள். என்னால் அத்தகைய கதைகளை எழுத முடியாது என்பது எனக்குத் தெரியும். என்னுடைய பாணி மற்றும் அவர்கள் எதிர்பார்த்த பாணிக்கு இடையே வித்தியாசம் இருந்தமையாலேயே நான் அத்திட்டத்திலிருந்து விலகினேன்" என மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது படங்களில் அதிகப்படியான வன்முறைக் காட்சிகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு காட்டப்படுவதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்துள்ளார். தான் ஒருபோதும் போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கவில்லை என்றும், தனது நடிகர்கள் ஊடாக 'போதைப்பொருள் வேண்டாம்' என்ற செய்தியையே சமூகத்திற்கு சொல்லி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, லோகேஷ் கனகராஜின் அடுத்த படைப்பாக கார்த்தி நடிக்கும் 'கைதி 2' அமையும் என்பதும், அதற்கு முன்னதாக அல்லு அர்ஜுனுடனான திரைப்படப் பணிகளை அவர் நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

