Jan 27, 2026 - 12:04 PM -
0
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (27) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் தன்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, தான் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி அண்மையில் இடைநிறுத்தப்பட்டது.
பொறுப்புவாய்ந்த அரசாங்க வைத்திய அதிகாரி என்ற வகையில், உரிய அனுமதியின்றி ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தமை மற்றும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

