Feb 5, 2026 - 04:52 PM -
0
கொழும்பு, முகத்துவாரம் மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றின் வெளிச்சுவரில் இருந்து கழன்று விழுந்த சிமெந்து பூச்சு தலையில் விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போதே, எதிர்பாராதவிதமாக சுவரில் இருந்த சிமெந்து பூச்சுப் பகுதி சிறுவனின் தலையில் விழுந்துள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (05) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 15, மோதரை, ரந்திய உயன பகுதியைச் சேர்ந்த மொட்டீர் சதருவன் எனும் 7 வயது சிறுவனாவார்.
அடுக்குமாடி குடியிருப்பின் வெளிச்சுவர் இடிந்து விழும் அபாயம் காணப்படுவது குறித்து நகர்ப்புற அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்த போதிலும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததே இந்த விபத்துக்குக் காரணம் என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இச்சம்பவம் குறித்து முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இச்சம்பவம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
இதன்போது, குறித்த அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் கட்டிடப் பணிகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

