Feb 5, 2026 - 10:03 PM -
0
ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவதற்கான தகுதியைப் பெற்றிருந்த இலங்கை மாணவன் ஒருவரை, உள்நாட்டு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்வதை மறுத்ததன் ஊடாக அவரது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், குறித்த மாணவனை உடனடியாக இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
பொரளையைச் சேர்ந்த இசுல தம்சித் ஜயரத்ன என்ற மாணவரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரணை செய்த பின்னர், நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர இத்தீர்ப்பை அறிவித்ததாக 'அத தெரண' நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
தான் கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை இலங்கை விமானப்படையின் குரூப் கெப்டனாக கடமையாற்றிய போது, ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவி கிடைத்ததை அடுத்து தான் ரஷ்யாவிற்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
அங்கு இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் 'சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் பரீட்சையில்' சித்தியடைந்ததாகவும், அது இலங்கையின் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குச் சமமானது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடத்தில் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த போதிலும், அதற்கான நிபந்தனைகளுக்குத் தான் பொருந்தவில்லை எனக் கூறி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர், அரச பல்கலைக்கழகமொன்றின் வைத்திய பீடத்தில் அனுமதி பெறுவதற்கான உரிய நிபந்தனைகளின் கீழ் மனுதாரர் தகுதி பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்தார்.
இவ்விடயத்தில் தலையிடுவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அதிகாரம் இல்லை எனச் சுட்டிக்காட்டிய நீதியரசர், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரிக்க அந்த அமைச்சு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டார்.
இதன் மூலம் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், குறித்த மாணவனை இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றின் மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.

