Feb 6, 2026 - 12:51 PM -
0
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மன்னாரிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞரான மக்கின் முகமது அலி, தனது சக்கர நாற்காலிப் பயணத்தை இன்று (06) மன்னாரில் நிறைவு செய்தார்.
வவுனியா, சூடுவந்தகுளம் பகுதியைச் சேர்ந்தவரும், வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவருமான மக்கின் முகமது அலி, கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி காலை 8.45 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
இலங்கை முழுவதிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகள் ஊடாக சுமார் 1,500 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் சக்கர நாற்காலியில் பயணித்த அவர், நேற்று (05) யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்த அவர், இன்று காலை 10 மணியளவில் மீண்டும் மன்னார் பஜார் பகுதியை வந்தடைந்தார்.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை வழங்கிய பல்வேறு நாடுகளுக்கும், புலம்பெயர் உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், இக்கட்டான சூழலில் பேதமின்றி உதவிய இலங்கை மக்களின் ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இந்தப் பயணம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
--

