Feb 6, 2026 - 11:15 PM -
0
ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நமது மிகப்பாரிய பலம் ஒற்றுமை என்றும், நமது நாட்டின் முக்கிய பலம் நாம் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது என்றும், அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் நாட்டை வலுவாகக் கட்டியெழுப்ப முடியும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கடந்த கால பாரம்பரியத்தின் அடிப்படையில், புதிய உலகத்திற்கு பொருத்தமான பொருளாதார மாற்றத்திற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் வலியுறுத்தினார்.
இன்று (06) பிற்பகல் நியங்கொட பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற டித்வா சூறாவளியால் வீடுகள் முழுமையாக சேதமடைந்த மற்றும் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களின் மீள்குடியமர்த்துவதற்காக 'Rebuilding Sri Lanka'' வேலைத்திட்டத்தின் கீழ் காணி வழங்குதல் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தல் மற்றும் புதிய வீட்டின் நிர்மாணப் பணிகளைத் தொடங்குதல் ஆகியவற்றிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
தும்பனை, ஹரிஸ்பத்துவ, ஹதரலியத்த, பூஜாபிட்டிய மற்றும் யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 146 குடும்பங்களுக்கு இந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன.
அதன்படி, முதல் கட்டமாக, வீடுகளை நிர்மாணிப்பதற்காக இருபது இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளைக் கொண்ட குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளைப் பழுதுபார்ப்பதற்காக மூன்று இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும், சேதமடைந்த வர்த்தகங்களை மீளமைப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபாவுக்கான காசோலைகளும் இதன்போது வழங்கப்பட்டன.
மேலும், நியங்கொட பிரிவேனா பாடசாலைக்கு கட்டிடம் ஒன்றும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
நமது அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு அரசியல் மேடையிலும் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதே முக்கிய தலைப்பாக இருந்தது. முன்னாள் தலைவர்கள் அதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். அதன்படி, நமது நாட்டில் அரசாங்கங்கள் மாறியபோது, மோசடி மற்றும் ஊழல் ஒரு முக்கிய தலைப்பாக மாறியது. நமது நாட்டின் அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் மோசடி மற்றும் ஊழல் பற்றிய ஒரு முழக்கம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்.
மேலும், இந்நாட்டின் அரசியல் மேடையில் ஜனநாயகம் ஒரு முக்கிய தலைப்பாக மாறிவிட்டது. தேர்தல்களை ஒத்திவைப்பது, பத்திரிகையாளர்களைக் கொல்வது, வீதிகளில் இடம்பெறும் கொலைகள் பற்றிப் பேசப்பட்டது. இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படாது. அரசியல் மேடையில் மீண்டும் ஒருபோதும் ஜனநாயகம் பற்றிய முழக்கத்தை எழுப்ப வாய்ப்பு இருக்காது.
மேலும், அரசியல் மேடைகளில் பொருளாதார வீழ்சிச பற்றி தொடர்ந்து பேசப்பட்டது. நமக்கு வெளியே உள்ள அரசியல் கட்சிகள் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது பற்றிய முழக்கங்களை அரசியல் மேடையில் முன்வைக்க வாய்ப்பு இருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்த நாட்டில் வறுமையை நாம் ஒழித்து வருகிறோம்.
மேலும், சர்வதேச உறவுகள் வலுவாக இல்லாததால் அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டுள்ளன. நாங்கள் மிகவும் வலுவான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறோம். எனவே, பலர் இப்போது நாட்டிற்கு சாதகமான அரசியல் கோசங்களை இழந்துவிட்டனர். எனவே, அவர்கள் அதிகாரத்திற்கான ஒரே பாதையாக இனவாத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த நாட்டை எப்படிக் கட்டியெழுப்புவது என்பது குறித்த தொலைநோக்குப் பார்வை நமக்கு உள்ளது. எந்த நாட்டைக் கட்டியெழுப்பினாலும், அந்த நாட்டின் வரலாறும், அந்த நாடு எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டது என்பதும் முக்கியம். எந்த நாடும் அந்த நாடு கட்டியெழுப்பப்பட்ட அடித்தளத்தின் அடிப்படையில் அபிவிருத்தித் திட்டங்களையும் பொருளாதார உத்திகளையும் வகுக்கின்றன.
எனவே, நமது கடந்த கால பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய உலகத்துடன் இணக்கமான ஒரு புதிய பொருளாதார மாற்றத்திற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த பூமியில் வேரூன்றி, இயற்கையாக இணைக்கப்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதன் மூலம் எங்கள் பொருளாதார உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, பௌத்த மதம் பற்றியும் நமது வரலாறு குறித்தும் நம்மிடம் இருப்பது அரசியல் மேடையில் பாரிமாற வேண்டிய கோசங்கள் அல்ல, நமது நாடு கட்டியெழுப்பப்பட்ட கடந்த காலத்துடன் தொடர்புகளைப் பேணி நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இன்று, அரசாங்கத்திற்கு மாத்திரமே அரசியல், தொலைநோக்கு மற்றும் கருத்தியல் இருக்கின்றது. இறைச்சி துண்டைச் சுற்றி கூடும் காகங்களின் கூட்டம் போல மற்றவர்கள் எந்த நேரத்திலும் வரும் ஏதோ ஒன்றை பிடித்துக் கொள்கிறார்கள், ஆனால் நாங்கள் ஒரு நல்ல தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறோம்.
டித்வா சூறாவளி நமது நாட்டின் மக்களுக்கும் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய பேரழிவு ஏற்படும் போது, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் சாதாரண சட்டம் போதுமானதாக இல்லை. ஒரு விசேட சட்டம் தேவை.
விசேட சட்டங்களை இயற்றுவதற்குத் தேவையான அதிகாரங்களை அரசியலமைப்பு வழங்குகிறது. பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் சிறப்புச் சட்டங்களை இயற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது போன்ற பேரழிவிலிருந்து மீள்வதற்கு, சிறப்பு அதிகாரங்களுடன் கூடிய சட்டங்கள் தேவை. அதனால்தான் அவசரகாலச் சட்டத்தை விதித்தோம். ஆனால் வரலாற்றில், அவசரகாலச் சட்டங்கள் பெரும்பாலும் தொழிற்சங்க இயக்கங்களை பலவீனப்படுத்தவும், ஊடகங்களை அடக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அந்த நோக்கத்திற்காக நாங்கள் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தவில்லை. இந்தக் கட்யெழுப்பும் செயல்முறை இன்னும் முடிவடையாததால், அடிப்படைப் பணிகள் முடியும் வரை அவசரகாலச் சட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
அது ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எனவே, கொள்வனவு செயல்முறை, விலைக்கு வாங்குதல் மற்றும் காணி கையகப்படுத்துதல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கும், அரச அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இந்த டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், மிக விரைவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டிய பகுதிகளுக்கும் தேவையான சட்டப் பாதுகாப்பை நாங்கள் வழங்கி வருகிறோம். இது ஒருபோதும் அடக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்தப்படாது.
நமது நாடு வீழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் ஒரு குழு உள்ளது. ஆனால், எந்தவொரு பேரழிவையும், எந்தவொரு சரிவையும் தாங்கக்கூடிய நாடாக இந்த நாட்டை நாம் உருவாக்குகிறோம். ஒரு பேரழிவிற்கு முகங்கொடுக்க, நாம் ஒன்றுபட வேண்டும். நாம் தனியாக நின்றால், நமது சக்தி பலவீனமாகும். நாம் ஒன்றுபட்டால், நாம் பலமடைவோம்.
எனவே, நம்மிடையே உள்ள உள் முரண்பாடுகளையும் மோதல்களையும் வென்று நம்மை ஒரே தேசமாக கட்டியெழுப்ப வேண்டும். நீண்ட காலமாக, உள் மோதல்களால் நாம் பலவீனமடைந்தோம். உள் மோதல்கள் நமது பலத்தைக் குறைக்கின்றன. சிறிய துரும்புகள் ஒன்றிணைந்து பெரும் பலத்தைக் கொண்டுவருவது போல, நாட்டின் அனைத்து மக்களும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபட வேண்டும். நமது நாட்டின் முதல் பலம் நமது ஒற்றுமையில்தான் உள்ளது. அதனால்தான் நாம் அதற்காக கடுமையாக உழைக்கிறோம்.
இன்று, முதல் முறையாக, இலங்கையில் ஒரு அரசாங்கம் வடக்கு மக்களின் கௌரவத்தையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு கொழும்பில் இயங்கும் அரசாங்கத்தின் மீது எப்போதும் சந்தேகங்கள் இருந்தன. இன்று, அந்த சந்தேகம் நீங்கியுள்ளது. இது ஒரு சிறந்த சூழ்நிலை. வடக்கில் இனவாத அரசியல் இயக்கங்களின் இருப்பு நின்றுவிட்டது.
பிரதேசம் மற்றும் எல்லைகளால் ஒன்றுபட்டாலும் ஒரு நாடாக ஒன்றுபடாது. அந்த நாடு ஒன்றுபட, அந்த நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும். நமது நாட்டைக் கட்டியெழுப்பும் முக்கிய பணி இதுதான். இனவாதத்தை யார் வேண்டுமானாலும் பரப்பலாம். இன்று மிகச் சிறிய குழுவே அதை செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் நம் நாட்டின் உண்மையான பௌத்த மக்கள் அதற்கு பலியாக மாற மாட்டார்கள். வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதத்திற்கு மீண்டும் இடம் கொடுக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் அதற்காக பாடுபடுகிறோம். அதற்கு சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் என்று நான் தெரிவிக்கிறேன்.
ஊழல் இல்லாத ஆட்சி, ஜனநாயகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோசமாக இனவாதம் மாறிவிட்டது. இனவாதத்திற்கு எதிராக நாங்கள் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் நமது மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.
இதுதான் உண்மையான பௌத்த மதம். இரக்கம் மற்றும் கருணைக்கு முன்னுரிமை அளிக்கும் மதம் ஒரு மோதலாக மாறுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே, பௌத்த மதம் மற்றும் அனைத்து மதங்களின் பண்புகள் மற்றும் அடித்தளங்களைக் கொண்ட ஒரு நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காக நாங்கள் போராடுகிறோம் என்றார்.

