Feb 10, 2026 - 12:30 PM -
0
நெஷனல் டெவெலப்மெண்ட் வங்கியானது (National Development Bank PLC – NDB) உலக வங்கி குழுமத்தின் உறுப்பினரான சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்துடன் (International Finance Corporation – IFC) உள்ள தனது மூலோபாய பங்குடைமையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. NDB வங்கியானது இலங்கையின் வங்கி மற்றும் நிதி சேவைத் துறையில் தாக்கம் ஏற்படுத்தும் பங்களிப்பாளராக தனது பயணத்தை முன்னெடுக்க ஆதரவாக, மூன்று (3) தனித்துறைகளில் இந்தப்பங்குடைமையை விரிவுபடுத்தியுள்ளது. 1998 ஆம் ஆண்டிலிருந்து பல துறைகளில் இணைந்து செயல்பட்டு வரும் NDB மற்றும் IFC இடையிலான இந்த உறவானது, எதிர்வரும் காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் (SME) மீது கவனம் செலுத்தும் இடர் பகிர்வு வசதி (Risk Sharing Facility – RSF) மற்றும் வர்த்தக நிதி வசதி, மேலும் பரிவர்த்தனை வங்கி சேவைகள், விநியோகச் சங்கிலி நிதி வர்த்தகத்தை மேம்படுத்தவும், காலநிலை நிதி முகாமைத்துவ நடைமுறைகளை வலுப்படுத்தவும் வங்கிக்கு உதவும் ஆலோசனை ஈடுபாடு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக விஸ்தரிக்கப்படவுள்ளது.
விரைவில் செயல்படுத்தப்பட உள்ள இடர் பகிர்வு வசதியானது [RSF], IFC-இன் சிறிய கடன் உத்தரவாதத் திட்டம் (Small Loan Guarantee Program – SLGP) என்பதன் ஒரு பகுதியாகும். இதன் கீழ், தகுதியான அனைத்து வசதிகளுக்கும் NDB உடன் IFC சம அளவில் இடர்களைப் பகிர்ந்து கொள்ளும். இந்தத் திட்டம், விவசாய பெறுமதிச் சங்கிலிகள், SME ஏற்றுமதியாளர்கள், பெண்கள் வலுப்படுத்தல் உள்ளிட்ட சமூக அபிவிருத்தி முயற்சிகளுக்கான கடனளிப்பை ஆதரிப்பதற்கு சிறப்பு கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக, இலக்கு வைக்கப்பட்ட பயிற்சி முயற்சிகள் மூலம் இந்த வசதியை திறம்பட நடைமுறைப்படுத்த NDB-யின் திறன்களை மேலும் வலுப்படுத்துவதோடு, வங்கியின் SME வாடிக்கையாளர்களின் திறன்களையும் மேம்படுத்தும் வகையில் IFC உட்பொதிக்கப்பட்ட ஆலோசனை ஆதரவையும் வழங்கும்.
இரண்டாவது ஒப்பந்தம், IFC-இன் உலகளாவிய வர்த்தக நிதி திட்டத்தின் (Global Trade Finance Program – GTFP) கீழ் வழங்கப்படும் வர்த்தக நிதி வசதியை உள்ளடக்கியதாகும். நிதியளிப்பு இல்லாத இந்த வசதி, NDB மேற்கொள்ளும் வர்த்தகத்துடன் தொடர்புடைய கட்டணப் பொறுப்புகளை உத்தரவாதம் செய்ய பயன்படுத்தப்படும்; இதன் மூலம் வங்கியின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படும். இந்த ஒத்துழைப்பின் வாயிலாக, NDBயானது, IFC-இன் வர்த்தக நிதி நிபுணர்களுடன் இணைந்து செயல்படவுள்ள அதேசமயம், IFC-இன் வலுவான கடன் நிலை மற்றும் இத்துறையில் உள்ள ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் பயனையும் பெறும்.IFC வழங்கும் AAA தர மதிப்பீடு பெற்ற உத்தரவாதமானது, பங்கேற்கும் வங்கிகளுக்கு உயர்தர இடர் தணிப்பை வழங்குகிறது. இது, உத்தரவாதம் அளிக்கப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளில் எதிர்தரப்பு இடரை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதுடன், மேம்பட்ட அபாய எடை நிர்ணயத்தின் மூலம் மூலதனப் பயன்பாட்டை உகந்ததாக மாற்றுகிறது. மேலும், NDB உடன் பரிவர்த்தனை செய்யும் உலகளாவிய இணை வங்கிகளின் நம்பிக்கையை உயர்த்தி, இறுதியில் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக முயற்சிகளை அதிகரிக்க வழிவகுக்கிறது. இலங்கை நிறுவனங்களை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் இணைக்கும் NDB-யின் பங்கிற்கு ஆதரவளிப்பதன் மூலம், இந்த வசதி SMEக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான சந்தை அணுகலை மேலும் விரிவுபடுத்த உதவும்.
NDB வங்கியானது நிதியளிப்பிற்கு மேலதிகமாக,பல ஆலோசனை முன்முயற்சிகளிலும் ஈடுபடுகிறது. உலகளாவிய SME நிதி வசதியின் (Global SME Finance Facility – GSMEF) கீழ் வழங்கப்படும் ஆதரவின் மூலம், வங்கியின் பரிவர்த்தனை வங்கி சேவைகள் மற்றும் விநியோகச் சங்கிலி நிதி வர்த்தகங்களை நவீனப்படுத்துவதற்காக IFC, NDB-க்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும். இந்த பங்குடைமையானது SCF மற்றும் TB வணிக செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, நிறுவன பெறுமதிச் சங்கிலிகளுக்குள் செயல்திறன் மிக்க பணப்புழக்க முகாமைத்துவத்தை உகந்ததாக்கவும், குறிப்பாக பெண்கள் தலைமையிலான தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்து SMEக்களுக்கான நிதி இடைவெளியை குறைக்கவும் உதவும்.மேலும், ஜப்பானிய அரசின் ஆதரவுடன், காலநிலை இடர் கண்டறிதல் மற்றும் இயற்பியல் இடர் முக்கியத்துவ மதிப்பீடு ஆகியவற்றை மேற்கொள்ள IFC வங்கிக்கு உதவவுள்ளது. இதன் மூலம், முழுமையான காலநிலை இடர் முகாமைத்துவக் கட்டமைப்பை நிறுவுவதற்கான அடித்தளம் உருவாகும். இந்த ஈடுபாடு, காலநிலை இடரை ஒரு முக்கிய இடர் வகையாக NDB முறையாக அடையாளம் கண்டு, அதை வங்கியின் மொத்த இடர் முகாமைத்துவக் கட்டமைப்பிலும் மூலோபாயத்திலும் ஒருங்கிணைக்க உதவும். மிகவும் பொருத்தமான காலகட்டத்தில் தொடங்கப்படும் இந்தத் திட்டம், வெளிப்படைத்தன்மை, தாங்குதன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கான வங்கியின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்த உதவும்.
இந்த முக்கியமான பங்குடைமை தொடர்பாக கருத்து தெரிவித்த NDB வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கெலும் எதிரிசிங்க தெரிவிக்கையில்:
“IFC உடனான எமது தற்போதைய பங்குடைமையை மேலும் வலுப்படுத்துவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். NDB தற்போது வலுவான வளர்ச்சி வேகத்தில் முன்னேறி வருகிறது; புதிய மூலோபாய வழிமுறையை ஆரம்பித்த நிலையில், 2030 ஆம் ஆண்டை நோக்கி மிகுந்த இலட்சியத்துடன் தனது பயணத்தை வகுத்து வருகிறது. இத்தகைய முக்கியமான காலகட்டத்தில் IFC உடன் மேற்கொள்ளப்படும் இந்த மேலதிக ஒத்துழைப்பானது IFC-இன் பரந்த தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நிதி வலிமையுடன் வங்கியின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்.இந்த பங்குடைமையின் மூலம், ஒவ்வொரு தனித்த ஈடுபாட்டிலும் எமது ஊழியர்களுக்கான திறன் அபிவிருத்தி மற்றும் அறிவு விருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வங்கி பயனடையும். குறிப்பாக தற்போது மிகுந்த தேவையில் இருக்கும் எமது SME வாடிக்கையாளர்களின் தேவைகளை விரைவாகவும் நெகிழ்வாகவும் ஆதரிக்கும் திறன் அதிகரிக்கும்.
அதேபோல், எமது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறம்படவும் தனிப்பயனாக்கப்பட்டதாகவும் வர்த்தக தீர்வுகளை வழங்கும் திறன் மேம்படும். காலநிலை இடர்க் கோணத்தில், தொடர்புடைய இடர் மதிப்பீட்டு திறன்களும் மேலும் வலுப்பெறும்.மொத்தத்தில், இந்த ஒத்துழைப்புகள் அனைத்தும் இணைந்து, நாட்டின் SME துறையினரை ஆதரிப்பதிலும், நிலையான பொருளாதார வளர்ச்சி திட்டத்தை முன்னெடுப்பதிலும் NDB அதிகமான பங்கு வகிக்க உதவும். அதேசமயம், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நீண்டகால நிலையான பெறுமதியை வழங்கும் வகையில் வங்கியை சிறப்பாக நிலைநிறுத்தும்.”
இந்த பங்குடைமைகள் தொடர்பாக IFC நிறுவனத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய நிதி நிறுவனங்கள் குழுமத்தின் பிராந்திய பணிப்பாளரான திரு. ஆலன் ஃபோர்லெமு கருத்து தெரிவிக்கையில்:
“SMEக்கள் வளர்ச்சி பெறும் போது, முழு பொருளாதாரங்களும் முன்னேறுகின்றன. இலங்கை தொழில்முனைவோருக்கான மூலதன அணுகல் இன்னும் ஒரு முக்கிய முன்னுரிமையாகவே உள்ளது. இதை தீர்க்கும் நோக்கத்துடன், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் வளரவும் விரிவடையவும் தேவையான நிதியையும் அறிவுத் திறனையும் பெற உதவும் வகையில்NDB உடன் எமது பங்குடைமையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, இலங்கையின் பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சி இலட்சியங்களுக்கான IFC-இன் நீண்டகால அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதுடன், அனைவரையும் உள்ளடக்கும் முன்னேற்றத்தை செயற்படுத்துவதில் தனியார் துறையின் பங்கை வலியுறுத்துகிறது.”இந்தப்பங்குடைமையானது இலங்கைக்கான உலக வங்கி குழுமத்தின் முன்னுரிமைகளுடன் ஒத்திசைந்து, SMEக்களுக்கான குறிக்கோள்மிக்க தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை கடக்க உதவுவதோடு, நாட்டின் நீண்டகால பொருளாதார தாங்குதன்மையை ஆதரிக்கிறது.

