Feb 10, 2026 - 01:35 PM -
0
அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாசார நிலையத்தில் நடைபெற்ற வட மாகாண முதலீட்டு உச்சிமாநாடு 2026 இல் ருக்மிணி திசநாயகம் நம்பிக்கை நிதியம் சிறந்த வர்த்தகமயமாக்கல் ஆராய்ச்சி திட்டங்களை அங்கீகரிக்கும் நோக்கில் இரண்டு வருடாந்த தங்கப் பதக்கங்களை வழங்குவதாக அறிவித்தது. இதில் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் மற்றொன்று வவுனியா பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்படவுள்ளது. இந்த முயற்சி இலங்கை பட்டப்படிப்பு மற்றும் பட்டப் பின்படிப்பு மாணவர்களிடையே புத்தாக்கம் தொழில் முயற்சி மனப்பாங்கு மேலும் பல்கலைக்கழகம் – தொழிற்துறை இடையிலான வலுவான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை நிதியத்தின் நிறுவனர் திரு. மோகன் திசநாயகம் இளம் தொழில் முயற்சித்துறை மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்:
'இந்த விருதுகள் மாணவர்கள் கல்விசார் சாதனைகளுக்கு அப்பால் சென்றுரூபவ் புத்தாக்கம் தொழில் முயற்சி உருவாக்கம் மற்றும் பொறுப்பான தேச கட்டமைப்பில் முனைப்புடன் ஈடுபட ஊக்குவிக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. கருத்துக்களை செயல்திறன் கொண்ட முயற்சிகளாக மாற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களை ஆதரிப்பது இலங்கையின் எதிர்காலத்திற்காக நாம் செய்யக்கூடிய மிக அர்த்தமுள்ள முதலீடுகளில் ஒன்றாகும்.' எனத் தெரிவித்தார்.
மறைந்த திருமதி ருக்மிணி திசநாயகத்தின் நினைவாக நிறுவப்பட்ட இந்த நம்பிக்கை நிதியம் கல்வி கலாசாரம் மற்றும் புத்தாக்கத் துறைகளை ஆதரிக்கும் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இலங்கையின் மிகச் சிறந்த தேசாபிமானிகளான சேர் பொன்னம்பலம் அருணாசலம் மற்றும் சேர் பொன்னம்பலம் ராமநாதன் ஆகியோரின் வம்சாவளியைச் சேர்ந்த திருமதி திசநாயகம் தனது அமைதியான பெருந்தன்மை மற்றும் வாழ்நாள் முழுவதும் செய்த அறப் பணிகளுக்காக நினைவுகூரப்படுகிறார்.
இந்த தங்கப் பதக்கங்கள் தொழிற்துறை பங்காளர்களுடன் உரிமங்களை வழங்கும் ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்த அல்லது பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனங்கள் உருவாகக் காரணமான ஆராய்ச்சி திட்டங்களை அனைத்துக் கல்வித் துறைகளிலும் கௌரவிக்கும். அறிவு பரிமாற்றத்தை வலுப்படுத்தி தொழில் முயற்சியாளர் சிந்தனையை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு பல்கலைக்கழக ஆராய்ச்சியின் பங்களிப்பை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவுகள் 2026 ஜனவரி 20 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ. அற்புதராஜா ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. தேர்வு நடைமுறை விருது அமைப்பு மற்றும் முதல் பதக்கங்களுக்கான கால அட்டவணை உள்ளிட்ட செயற்படுத்தும் ஏற்பாடுகளை இறுதி செய்ய இரு நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.

