Feb 10, 2026 - 05:19 PM -
0
ரஜினிகாந்த் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோச்சடையான். இப்படம் முப்பரிமாண தோற்றத்தில் உருவாக்கப்பட்ட படமாகும். இப்படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி மற்றும் நாசர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருந்தனர். இப்படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இப்படத்திற்கான கதையை இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் எழுதியிருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இப்படம், 2014 மே மாதம் 23 ஆம் நாள் வெளியானது. தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு புதிய முயற்சியாக அமைந்தது. இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனம் படத்தின் வெளியீட்டிற்காக ரூபாய் 10 கோடியைக் கடனாகப் பெற்றிருந்தது. அந்த கடனை திரும்பச் செலுத்தும் தருணத்தில், தயாரிப்பு நிறுவனம் கடன் பெற்றிருந்தவர்களிடத்தில் காசோலையை வழங்கியது. இருப்பினும், சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால், அந்த காசோலை திரும்பிவிட்டது.
இதையடுத்து, கடன் வழங்கியிருந்த தரப்பு இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடியது. இந்த மேல்முறையீட்டுத் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், கடன் கொடுத்தவர்களிடத்தில் தயாரிப்பாளர் தரப்பு 2.52 கோடியை நான்கு வாரங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைத் திருப்பி செலுத்தாவிட்டால், தயாரிப்பாளருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

