Feb 10, 2026 - 05:41 PM -
0
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
சபையின் தலைவரின் பாவனைக்காக ஏற்கனவே இரண்டு அரச வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சபையினால் முன்னெடுக்கப்படும் 'கண்டி வடக்கு - பாததும்பர ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின்' ஒப்பந்த நிதியைப் பயன்படுத்தி, டொயோட்டா பிராடோ வகை SUV ஜீப் ஒன்றைக் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாகனம் எத்தகைய பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமலே, வாடகைக் கட்டணமாகச் சுமார் 12,750,000 ரூபா (1 கோடியே 27 இலட்சத்து 50 ஆயிரம்) பணத்தை 'ஜீ.என். ஒட்டோ ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த நிறுவனத்திடமிருந்து வாகனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, சந்தேகநபர் பெறுகை விதிமுறைகளை மீறிச் செயற்பட்டு, அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
வாகனத்தை முறைப்படி பொறுப்பேற்காமல், அதற்கான பணத்தைச் செலுத்தி விநியோகத்தருக்குத் தகாத இலாபத்தை ஈட்டிக்கொடுத்துள்ளதன் மூலம், ஊழல் மற்றும் ஊழல் புரியச் சதி செய்தல் ஆகிய குற்றங்களைப் புரிந்துள்ளதாகவும், அரசாங்கத்திற்குப் பெரும் நிதி நட்டத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

