செய்திகள்
2026 வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆரம்பம்

Feb 11, 2026 - 05:29 PM -

0

2026 வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார். 

'தெரண பிக் ஃபோகஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

வாக்காளர்கள் தகுதி பெறும் திகதியாக பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கருதப்படுவதாகவும், அத்திகதியில் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்பதை உறுதிப்படுத்தியவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளும் வசதி காணப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். 

வாக்காளர் பட்டியலுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, வீடு வீடாகச் சென்று தரவுகளை சேகரிக்கும் முறை மற்றும் உள்வாங்கும் மற்றும் நீக்கும் முறைமை ஆகியவை பின்பற்றப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார். 

2026 ஆம் ஆண்டிற்கான தகவல்களை சேகரிக்கும் போது உள்வாங்கும் மற்றும் நீக்கும் முறைமையே பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தகுதி பெறும் பட்டியலில் சேர்க்கப்படும் போது பெப்ரவரி 01 ஆம் திகதி ஆகும்போது 18 வயது பூர்த்தியடைபவர்கள் மற்றும் வதிவிடத்தை மாற்றியவர்கள் உள்வாங்கப்படுவதுடன், நீக்கல் பட்டியலில் மரணமானவர்களை நீக்குதல் மற்றும் வதிவிடத்தை மாற்றியமை என்பன உள்ளடங்குவதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார். 

அத்தோடு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளம் ஊடாக ஈ-சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான வரைபு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். 

அங்கு பொதுமக்கள் தமது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசீலித்துப் பார்க்கும் வசதி காணப்படுவதுடன், ஒருவேளை தமது பெயர் உள்வாங்கப்படாவிடின், அங்குள்ள ஆலோசனைகளுக்கு அமைய கணக்கொன்றை ஆரம்பித்து கோரிக்கைகளை முன்வைக்கும் வசதி காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அக்கோரிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உரிய கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார். 

அத்தோடு தமது தகவல்கள் தொடர்பில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், அதாவது முகவரி, பெயர், அடையாள அட்டை இலக்கம், வீட்டு இலக்கம் என்பன மாற்றப்பட வேண்டுமாயின் இந்த இணையத்தளம் ஊடாக அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கும் வசதி காணப்படுவதாகவும் அவர் கூறினார். 

தமது இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொள்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

எவரேனும் ஒரு பிரஜையினால் பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படவில்லை என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பின், அவர்களின் வீடுகளுக்குச் சென்று தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அங்கு கருத்து வெளியிடுகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார். 

அத்தோடு அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் தற்போது 2026 வரைபு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஊடாகவும் தமது பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசீலிக்கும் வசதி காணப்படுவதாக அவர் அங்கு குறிப்பிட்டார். 

வாக்காளர் இடாப்பிற்காக பிரதேச ரீதியாக தகவல்களை சேகரித்தல் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். 

கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் ஊடாக உள்வாங்கல் மற்றும் நீக்கல் பட்டியல்களைத் தயாரித்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு ஒப்படைத்தல் மார்ச் 03 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. 

அத்தகவல்களுக்கு அமைய பெயர் பட்டியலை மீண்டும் பட்டியலிட்டு மே 5 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை 28 நாட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார். 

அதற்கமைய தமது பெயர் தகுதி பெறும் பட்டியலில் இல்லாவிடின், இந்த 28 நாட்களுக்குள் அவர்களுக்கு மீண்டும் உரிமை கோரும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அத்தோடு உரிய ஆவணத்தில் தம்மைப் பற்றி ஏதேனும் தவறான தகவல்கள் உள்ளடங்கியிருப்பின் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கும் இந்த 28 நாட்கள் ஊடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05