Feb 12, 2026 - 11:41 AM -
0
சிவகார்த்திகேயன் நடித்த 'முகப்புத்தகம்' என்ற ஷார்ட் பிலிம் மூலம் கவனம் பெற்றவர் அட்லீ. அதன் பின்னர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்ட அவர், 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் ஆகியோர் நடித்த அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.
முதல் படத்தின் வெற்றியால் செம சந்தோஷத்தில் இருந்த அட்லீக்கு அடுத்த படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதை, உணர்வுபூர்வமான காட்சிகள், கமர்சியல் அம்சங்கள் என எல்லாம் கலந்த பக்கா படமாக இருந்ததால் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி, விஜய் – அட்லீ கூட்டணியை மேலும் வலுப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களும் உருவாகி, இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தன. இதன் மூலம் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனராக அட்லீ தன்னை நிலைநிறுத்தினார்.
தமிழில் சாதனை படைத்த பின்னர், பாலிவுட்டிலிருந்து அட்லீக்கு அழைப்பு வந்தது. அதிலும் ஷாருக் கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது அவரது பயணத்தில் முக்கிய திருப்பமாக அமைந்தது. சுமார் நான்கு ஆண்டுகள் உழைப்பில் உருவான ஜவான் திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர்களுக்கே எட்டாக்கனியாக இருந்த இந்த இலக்கை, தனது ஐந்தாவது படத்திலேயே அடைந்தது அட்லீக்கு தனித்துவமான மைல்கல்லாக அமைந்தது.
தற்போது பான் - இந்தியா அளவில் அதிக எதிர்பார்ப்பு உருவாக்கும் இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்கிறார். பல முன்னணி நடிகர்கள் அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அட்லீயின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோட்-சூட் அணிந்து புன்னகையுடன் டிப்-டாப் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அதிக லைக்குகள் மற்றும் பாராட்டுகளை பெற்று வருகிறது. சிறுவயதிலிருந்தே தன்னம்பிக்கையுடன் காட்சியளித்த அந்த சிறுவன், இன்று இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்திருப்பது அவரது உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் சான்றாக பார்க்கப்படுகிறது.

