Feb 13, 2026 - 03:44 PM -
0
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தத் தவறிய சுங்க வரி நிலுவைகளை அறவிடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்தத் தவறிய சுங்க வரிகளை அறவிடுவதற்கு உத்தரவிடுமாறு கோரி, சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விடயம் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சில நிறுவனங்களின் வரி நிலுவைத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, 2020ஆம் ஆண்டில் டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் வரி நிலுவை 1.29 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 1.6 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிறுவனங்களுக்கு உண்மையாகவே வரி செலுத்தும் எண்ணம் இருந்திருந்தால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, பிரதிவாதியான டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரசிக் சரூக், தனது கட்சிக்காரர்களின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அனைத்து வங்கிக் கணக்குகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவை வரிகளை அறவிடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான சத்தியக்கடதாசி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சில நிறுவனங்களின் உற்பத்தி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த தலைமை நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம், மனுவை மீண்டும் மார்ச் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் இவ்விடயத்தின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறு தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தது.

