Feb 13, 2026 - 08:46 PM -
0
அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி நகரில் விசா ஆலோசனை மையம் ஒன்றை நடத்தி வருவதாகக் கூறி, அதன் ஊடாக அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத் தருவதாகத் தெரிவித்து இவர்கள் பணமோசடி செய்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 35 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு வாக்குறுதியளித்தபடி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணை அதிகாரிகள், குறித்த நிறுவனத்தில் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, அந்த நிறுவனம் பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி, விசா ஆலோசனை மையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது.
இந்த மோசடி நிறுவனத்தை நடத்தி வந்த கம்பளை மற்றும் தலாத்துஓயா பிரதேசங்களைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த இடத்திலிருந்து 7 வெளிநாட்டு வேலை ஒப்பந்தங்கள், 5 கடவுச்சீட்டுகள் மற்றும் பணப் பற்றுச்சீட்டு புத்தகங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (13) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

