Feb 16, 2026 - 09:31 AM -
0
வத்தளை, கால சந்தி பகுதியில் தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்தப் பொதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொதியினுள் 04 டி-56 ரகத் தோட்டாக்கள், 04 ரிவோல்வர் ரகத் தோட்டாக்கள், 02 பிஸ்டல் ரகத் தோட்டாக்கள் மற்றும் 11 வெவ்வேறு வகைப்பட்ட சிம் அட்டைகள் காணப்பட்டதுடன், அதனை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யக்கலமுல்ல, பொல்பாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர் கல்நேவ, கல்தொட்ட மற்றும் எல்பிட்டிய ஆகிய நீதிமன்றங்களினால் பிடியாணை மற்றும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

