Feb 17, 2026 - 05:10 PM -
0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி வட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, மோசடியான முறையில் பணத்தைச் சேகரித்த பிக்கு ஒருவர், மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணை அலகினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
முருதலாவ பகுதியில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த போதே இந்த 21 வயதான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காகவெனத் தெரிவித்து, மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட பல கடிதங்களும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கடிதங்களில் சம்மந்தப்பட்ட இரண்டு அமைச்சுகளினதும் செயலாளர்களின் கையொப்பங்கள் இடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கடிதங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி, சந்தேகநபரான பிக்கு பணத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள், மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்சவின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

