Feb 18, 2026 - 01:03 PM -
0
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கவுதம் கம்பீருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பெரிய சலுகையை வழங்கியுள்ளது. அதாவது கம்பீருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர், சிஇஓ பதவிகளுடன், அணியின் உரிமையாளர் பங்கையும் அணி உரிமையாளர்கள் வழங்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் இந்த மெகா ஆஃபரை வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன. ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையில் மாற்றங்கள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வந்துள்ள புதிய முதலீட்டாளர் ஒருவர் கம்பீருக்கு இந்த மெகா ஆஃபரை வழங்கியுள்ளார். அணியின் இரண்டு முதல் மூன்று சதவீத பங்குகளை கம்பீருக்கு வழங்க ராஜஸ்தான் ராயல்ஸ் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள கம்பீரால், ஐபிஎல் அணியில் இணைய சட்டரீதியான தடைகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த லோதா கமிட்டி பரிந்துரைப்படி, இந்திய அணியில் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர், ஒரே நேரத்தில் ஐபிஎல் அணியில் இருக்க முடியாது. ஆகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அளிக்கும் கவர்ச்சிகரமான சலுகையை ஏற்க வேண்டுமானால், கம்பீர் இந்தியப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.
ஐபிஎல் தொடரில் வீரராகவும், ஆலோசகராகவும் கம்பீருக்கு சிறந்த சாதனை உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இரண்டு முறை அணி தலைவராகவும், ஒரு முறை ஆலோசகராகவும் வழிநடத்தி கிண்ணத்தை வென்றுள்ளார். மேலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தொடர்ச்சியாக இரண்டு சீசன்களில் பிளேஆஃபிற்கு அழைத்துச் சென்றதிலும் கம்பீர் முக்கியப் பங்காற்றினார்.
தற்போது 2026 டி20 உலகக் கிண்ணத்திற்கான பணிகளில் கம்பீர் தீவிரமாக உள்ளார். 2027 ஒருநாள் உலகக் கிண்ணம் வரை பிசிசிஐயுடன் கம்பீருக்கு ஒப்பந்தம் உள்ளது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலும் கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி தனக்கு நாட்டுக்கு சேவை செய்ய கிடைத்த பெரிய வாய்ப்பு என கம்பீர் அடிக்கடி கூறி வருகிறார். அகவே அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆபரை ஏற்க மாட்டார் என்றே பலரும் தெரிவிக்கின்றனர்.

