Feb 18, 2026 - 07:53 PM -
0
2025 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோயினால் இந்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரன தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டாகும்போது இந்நாட்டு மக்கள் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழக்காத நிலையை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அந்த விசேட வைத்தியர் குறிப்பிட்டார்.
உலக சுகாதார ஸ்தாபனம் இலக்கு வைத்துள்ளதைப் போன்று, உலக சமூகமாக இந்த இலக்கு காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
இன்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே வைத்தியர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நீர்வெறுப்பு நோயானது பாலூட்டும் விலங்குகளிடமிருந்து வைரஸ் மூலம் பரவும் ஒரு நோய் எனவும், இது நூறு சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் எனவும் வைத்தியர் குறிப்பிடுகிறார்.
உலகில் மிகக் குறைந்த அளவிலானோரே இந்த நோயிலிருந்து உயிர் தப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
விசேடமாக இந்த நோய் காரணமாக இளைஞர்களே உயிரிழந்துள்ளதாகவும், சிறு பிள்ளைகளும் இந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், இந்த நோய்க்குச் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் இதனை முற்றாகத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
"கடந்த வருடம் 14 மனித உயிரிழப்புகளே ஏற்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றில் வருடமொன்றில் மிகக்குறைந்த மனித உயிரிழப்புகள் பதிவானது இதுவேயாகும். ஆனால் இதனை நாம் பூச்சியம் வரை குறைத்துக்கொள்ள வேண்டும். எதிர்வரும் 3 வருடங்களுக்குள் இதனைச் செய்ய வேண்டும். இந்த மரணங்கள் அதிகளவாக புத்தளம், குருநாகல் மற்றும் இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளன."
நாய்கள் மற்றும் பூனைகள் கடிப்பதனாலும், நகங்களால் கீறுவதனாலும், விலங்குகளின் உமிழ்நீர் படுவதனாலும், அதேபோல் தோலில் உள்ள காயங்களை விலங்குகள் நக்குவதனாலும் இந்த நோய் ஏற்படுகிறது. விலங்கு கடித்ததன் பின்னர் ஓடும் நீரில் 15 நிமிடங்கள் கழுவுதல் மற்றும் சவர்க்காரம் இட்டுக் கழுவுதல், உரிய முறையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது என்பன மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

