Feb 20, 2026 - 09:38 AM -
0
Fems இனால் வலுவூட்டப்படும் H.E.R Foundation, Teejay Lanka PLC உடன் இணைந்து, ருவன்வெல்ல றோயல் கல்லூரியில் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த கல்வித் திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக அமைந்த இந்த நிகழ்ச்சித்திட்டம், மாணவிகளை வலுவூட்டுவதையும் மாதவிடாய் ஆரோக்கியம் குறித்த கலந்துரையாடல்களை இயல்பானதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, அத்தியாவசியமான சுகாதார உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விரிவான மாதவிடாய் சுகாதாரக் கல்வி ஆகியவற்றை ஒன்றிணைத்து வழங்கியது.
பங்காண்மையின் அங்கமாக, பாடசாலை வளாகத்தினுள் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகளை Teejay Lanka பொறுப்பேற்று முழுமையாக நிதியுதவி வழங்கியது. அதேவேளை, H.E.R Foundation விழிப்புணர்வு மற்றும் கல்விச் செயற்பாடுகளில் கவனம் செலுத்தியது. முறையான மலசலகூட வசதிகள் இல்லாமை மற்றும் மாதவிடாய் ஆரோக்கியம் குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்காமை போன்ற காரணங்களால் மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளிக்கத் தவறும் நிலையை மாற்றியமைப்பதை நோக்காகக் கொண்டு, அவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களுக்கு இந்த முன்னெடுப்பு ஒன்றிணைந்து தீர்வை வழங்குகின்றது.
Fems இனால் முன்னெடுக்கப்படும் H.E.R Foundation, உதவி, வலுவூட்டல் மற்றும் கட்டியெழுப்பல் ஆகிய பிரதான அரண்களின் அடிப்படையில் இயங்குகின்றன. இலங்கையில் மாதவிடாய் சுகாதார மூட நம்பிக்கைகளை இல்லாமல் செய்வதில் முன்னிலையில் காணப்படுகின்றது. இதுவரையில், இந்த அறக்கட்டளையினால், நாடு முழுவதிலுமுள்ள தொழிற்சாலைகள், பெருந்தோட்டகள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் சிறைகளைச் சேர்ந்த 300,000க்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ருவன்வெல்ல றோயல் கல்லூரியில் வைபவ ரீதியாக கழிவறை வசதி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து, சுமார் 400 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருநாள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை விழிப்புணர்வு பற்றிய அமர்வுகளில் பங்கேற்றிருந்தனர். அவற்றுக்கு மருத்துவமாது தகைமை வாய்ந்த தாதியியல் அதிகாரிகள் ஆதரவளித்திருந்தனர்.
மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அமர்வுகள், மாதவிடாய் சர்க்கரம், தூய பழக்கங்களை பேணுவது மற்றும் திறந்த மற்றும் பாதுகாப்பான சூழலில் மூட நம்பிக்கைகள் தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்கும் வகையில் அமைந்திருந்தன. திறந்த தொடர்பாடல், துல்லியமான தகவல் மற்றும் ஆதரவளிக்கும் இல்லச் சூழல் போன்றவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் பெற்றோர்களுக்கான அமர்வில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. அதனூடாக மாதவிடாய் காலப்பகுதியை நம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் தொடர்வதற்கு அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த விழிப்புணர்வூட்டும் அமர்வுகள், செயற்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளதுடன், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாடசாலைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் பகிரப்பட்ட பொறுப்பையும் உணர்த்துவதாக அமைந்துள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஈடுபடுத்துவதனூடாக, தலைமுறை ரீதியான நிலைத்திருக்கும், பொது தாக்கத்தை ஏற்படுத்த இந்தத் திட்டம் எதிர்பார்ப்பதுடன், வகுப்பறைகளுக்கு அப்பால் இல்லங்கள் மற்றும் சமூகங்களுக்கு சென்றடைய எதிர்பார்க்கிறது.
ருவன்வெல்ல றோயல் கல்லூரியில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதனூடாக, குருகல்ல, குருகல்ல கனிஷ்ட வித்தியாலயம், கஹனவிட்ட, கஹனவிட்ட கனிஷ்ட வித்தியாலயம், ருவன்வெல்ல, ருவன்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரி மற்றும் பாரதெனிய ஆரம்ப பாடசாலை ஆகியன அடங்கலாக இந்த நடவடிக்கை பல பாடசாலைகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு குறித்து ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ் (Hemas Consumer Brands) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் பெண் சுகாதாரப் பிரிவிற்கான பொது முகாமையாளர் சச்சினி கமகே கருத்துத் தெரிவிக்கையில், “Teejay Lanka நிறுவனத்தினால் இந்த மலசலகூட வசதி பூர்த்தி செய்யப்பட்டமையானது ஒரு பெருமைக்குரிய மைல்கல்லாகும். H.E.R Foundation இனூடாக, ஆரோக்கியமான மற்றும் விழிப்புணர்வுமிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக விழிப்புணர்வு, அணுக்கம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை Fems தொடர்ந்தும் ஊக்குவித்து வருகின்றது. அறிவின் மூலம் சமூகங்களை வலுப்படுத்துவதற்கும், பெண்கள் தமது மாதவிடாய் காலத்தை கண்ணியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கையாள்வதற்கு ஆதரவளிப்பதற்கும் எமது அர்ப்பணிப்பை இந்த பங்காண்மை பிரதிபலிக்கின்றது,” என்றார்.
Teejay Lanka நிறுவனத்தின் சட்ட விவகாரங்கள், கூட்டாண்மை தொடர்பாடல்கள் மற்றும் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றிற்கான பிரதிப் பொது முகாமையாளர் கேஷினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “H.E.R Foundation உடன் கைகோர்ப்பதன் மூலம், உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளம் ஆகிய இரண்டிலும் முதலீடு செய்து ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளது. இந்த வசதி நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தமையானது, அர்த்தமுள்ள ஒத்துழைப்பின் வலிமையையும், இளம் பெண்களின் வாழ்வில் ஒரு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகின்றது.” என்றார்.

