Feb 20, 2026 - 10:12 AM -
0
மலையாள திரையுலகில் டாப் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மம்மூட்டி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025 ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார்.
இந்த நிலையில்,வைத்தியசாலை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மம்மூட்டி, உடல்நலக் குறைவான அந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்முறையாக பொதுவெளியில் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. எனக்கு நீண்ட காலமாக வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் இருந்தது. எதனையும் என்னால் நுகர முடியவில்லை. அதேபோல் உணவின் சுவையும் தெரியவில்லை. இப்போதுதான் அது மெதுவாக திரும்பி வருகிறது. ஒரு விஷயத்தை நாம் இழக்கும் போதுதான் அதனுடைய மதிப்பை உணர்கிறோம்" என கூறினார்.
சுமார் ஓராண்டு காலம் சிகிச்சைக்கு பின் நடிகர் மம்மூட்டி இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள் வெளியானாலும், அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

