Feb 20, 2026 - 03:32 PM -
0
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் அணி தலைவர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி. இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,
அவுஸ்திரேலியாவுக்கு இந்த உலகக் கிண்ண பயணம் மோசமாக அமைந்திருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கம்மின்ஸ், ஹேசில் வுட் காயத்தால் விலகினர். முழு உடல்தகுதியை எட்டாததால் தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட்டும் விளையாடவில்லை. ஆனால் அவர்கள் ஜிம்பாப்வேயுடன் தோற்றபோதே, உலகக் கிண்ண வாய்ப்பு முடிந்து விட்டதாக நினைத்திருப்பார்கள்.
முந்தைய ஐ.சி.சி. மற்றும் உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய அணிகளுடன் ஒப்பிடும்போது தற்போதைய அவுஸ்திரேலிய அணியிடம் வெற்றி தொனிக்குரிய ஒளிவட்டம் தெரியவில்லை. இது போன்ற உலக கிண்ண போட்டியை ஜெயிக்க வேண்டும் என்றால். உங்களது சிறந்த வீரர்களும், அனுபவ வீரர்களும் ஒருங்கிணைந்து முக்கியமான தருணங்களில் கைகொடுக்க வேண்டும். அதை செய்யவில்லை. கேமரூன் கிரீன், டிம் டேவிட் போன்ற முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் போதுமான ஓட்டங்கள் எடுக்காததும் பின்னடைவுக்கு காரணமாகும்.
2028 ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் இருக்கமாட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது போல் தோன்றுகிறது. அதே சமயம் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் நிச்சயம் அணியில் இருப்பார்கள். மார்கஸ் ஸ்டோனிசின் இடமும் கேள்விக்குறி தான். ஆனால் உலகம் முழுவதும் நடக்கும் 20 ஓவர் லீக்கில் மட்டும் விளையாடும் அவரது ஆல் - ரவுண்டர் திறமைக்காக அணியில் தொடரலாம் இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.

