Feb 20, 2026 - 05:08 PM -
0
நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு ‛சென்சார்' சான்று கிடைக்காததால் திட்டமிட்டப்படி ஜனவரி 9 ம் திகதி வெளியாகவில்லை. தற்போது ஒன்றரை மாதங்கள் கடந்தாலும் கூட இன்னும் கூட சென்சார் குழு திரைப்படத்தை பார்க்கவில்லை என்றும், அதன் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடிப்பில் ‛ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி உள்ளார். விஜய் தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கத்தில் ‛ஜனநாயகன்' தான் தனது கடைசி படம் என்று அறிவித்தார்.
திரைப்படத்தை கேவிஎன் புரோடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றிருந்த அரசியல் சார்ந்த டயலாக்குகளால் இந்த திரைப்படம் ரசிகர்களை தாண்டி அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் திட்டமிட்டப்படி ஜனவரி 9 ஆம் திகதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைக்காதது தான் முக்கிய காரணம். இதையடுத்து திரைப்படம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. அதோடு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளிலும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் சென்சார் குழுவுடன் மோதலை தவிர்க்கும் வகையில் போடப்பட்ட வழக்கை படக்குழு வாபஸ் வாங்கியது.
இருப்பினும் ஜனநாயகன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இப்படியான சூழலில் தான் விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி வைத்தியம் வந்துள்ளது. அதாவது 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி 'மூவிஸ் சிங்கப்பூர் எக்ஸ்' தளம் வெளியிட்டுள்ள செய்தியில்,
‛‛ஜனநாயகன் திரைப்படத்தை முதன்மை தணிக்கைக்கு பிறகு மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் படத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய குழு இன்னும் எந்த நடவடிக்கையையும் தொடங்கவில்லை.
மேலும் மறு தணிக்கை விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு இன்னும் எந்த தகவலும் அனுப்பி வைக்கப்படவில்லை'' என கூறப்பட்டுள்ளது.
இதனால் ‛ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிடும் திகதியை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி மாதத்தில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி திரைப்படத்தை இன்னும் சில வாரங்களில் மறு தணிக்கை குழு பார்த்து சென்சார் சான்று வழங்கினாலும் கூட படத்துக்கு தேவையான தியேட்டர்கள் கிடைப்பது, மாணவர்களின் தேர்வு அட்டவணை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம்உள்ளது.
இனி மார்ச், ஏப்ரல் மாதங்களில் பாடசாலை மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள், தமிழக சட்டசபை தேர்தல் வருகிறது. இந்த சமயத்தில் ‛ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியீடு செய்தால் வசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைத்தாலும் கூட திரைப்படத்தை வெளியீடு செய்வதை ஒத்திவைக்கவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

