Feb 21, 2026 - 07:12 AM -
0
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன.
தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது. திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நாம் தமிழர் கட்சியை தொடங்கினார்.
2016-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்தக் கட்சி, அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது.
தேர்தலில் ஒரு அரசியல் கட்சி 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றால் மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் நடைமுறை உள்ளது.
அந்த வகையில், கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில், அதாவது கடந்த ஆண்டு (2025) ஜனவரி 10 ஆம் திகதி நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது.
இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில், தான் போட்டியிடும் தொகுதியையும் அறிவிக்க உள்ளார் சீமான்.

