Feb 21, 2026 - 09:55 AM -
0
கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் இம்மாதம் 27, 28 ஆம் திகதி நடைபெற இருப்பதாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை யோசப்தாஸ் ஜெபரட்னம் அடிகளார் தெரிவித்தார்.
நேற்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை அங்கே நற்கருணை ஆராதனையும், மாலை வழிபாடுகளும் நடைபெறும். 28 ஆம் திகதி காலை திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இந்தத் திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
குறிப்பாக, கச்சதீவு யாத்திரைக்காகச் செல்ல இருக்கின்ற யாத்திரிகர்களுக்கான பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 27 ஆம் திகதி அதிகாலை நான்கு மணியிலிருந்து பகல் ஒரு மணிவரை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகாட்டுவான் ஜெட்டியை நோக்கிய பேருந்து பயணங்கள் அங்கே செய்யப்பட இருக்கின்றன.
குறிகாட்டுவான் ஜெட்டியிலிருந்து படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இங்கே போக விரும்புகின்றவர்கள் குறுக்கட்டுவான் இறங்கு துறையிலே தங்களுடைய அடையாள அட்டையை காட்டி தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.
வேறு எங்கும் அந்தப் பதிவுகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதே வேளையிலே, இங்கு போகின்ற யாத்திரியர்கள் 27 ஆம் திகதி தேவையான உணவுகளைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
27 ஆம் திகதி இரவு உணவு அங்கே வழங்கப்பட மாட்டாது. ஆனால் 28 ஆம் திகதி காலை திருநாள் திருப்பலி முடிந்த பிற்பாடு காலை உணவு யாத்திரியர்கள் எல்லாருக்கும் வழங்கப்படும்.
இந்தப் படகு சேவையின் ஒரு வழி கட்டணமாக 1,200 ரூபாய் அறவிடப்பட இருக்கின்றது. அதே வேளையிலே இங்கு வருகின்றவர்கள் தேவையான குடிநீரையும் கொண்டு வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். 27 ஆம் திகதி பகல் ஒரு மணிக்குப் பின்னர் படகு சேவைகள் இடம்பெற மாட்டாது என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.
இந்தத் திருநாளிலே இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்ற இருக்கிறார்கள்.
எல்லாருமாக ஒன்று கூடி புனித அந்தோனியார் திருத்தலத்திலே நமது நாட்டுக்காகவும், நமது மக்களுக்காகவும், நம்முடைய மக்களுடைய சுதந்திரமான வாழ்வுக்காகவும் ஆசீர்வாதம் வேண்டி உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம். வழமை போல இந்தத் திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பல குருக்கள் துறவிகள் வர இருக்கின்றார்கள்.
இந்த வருடம் இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையிலே நூற்றுக்கு மேற்பட்ட குருக்கள் துறவிகள் அங்கே வருகின்றார்கள். அதே வேளையில் இலங்கையிலிருந்தும் யாழ். மறை மாவட்ட குருமுதல்வராகிய நானும் என்னோடு கூட ஐம்பதுக்கு மேற்பட்ட குருக்கள் துறவிகள் இந்தத் திருநாளிலே பங்கு பெற இருக்கிறார்கள்.
--

