Feb 22, 2026 - 12:25 AM -
0
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கான 'ஆம்பர்' நிறத்திலான முதலாம் இலக்க வெள்ள அபாய எச்சரிக்கை இன்று (22) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது நாளை (23) நள்ளிரவு 12.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் நிலவும் பகுதிகள்:
மகாவலி கங்கையின் சில நீரேந்துப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வெள்ள அபாயத்தை எதிர்நோக்கும் பிரதேச செயலகப் பிரிவுகள்:
கிண்ணியா
மூதூர்
சேருவில
வெலிகந்த
லங்காபுர
தமன்கடுவ
திம்புலாகல
பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கான விசேட எச்சரிக்கை:
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதியிலும், சோமாவதி ரஜமகா விகாரையின் நுழைவாயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறு வெள்ள நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, எதிர்வரும் சில தினங்களுக்கு சோமாவதி ரஜமகா விகாரைக்குச் செல்லும் பக்தர்களும், மேற்கூறிய பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், சாத்தியமான வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையைக் கையாள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

