Feb 23, 2026 - 07:08 PM -
0
சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் சுழியோடி (Diving) கடல் அட்டைகளை பிடித்த பத்து நபர்களுடன் 1,232 கடல் அட்டைகள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதிக்கு அப்பால் உள்ள மேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மூன்று டிங்கி படகுகளை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, 29 முதல் 54 வயதுக்கு இடைப்பட்ட, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைத் தொகுதி, டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

