Feb 24, 2026 - 01:24 PM -
0
களனிவெலி ரயில் மார்க்கத்தின் புவக்பிட்டிய மற்றும் அவிசாவளை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட கிரிவந்தல ரயில் நிலையத்திற்கு அருகில் ஹைலெவல் வீதி ரயில் கடவையில் திருத்தப் பணிகளை முன்னெடுப்பதற்காக, அது தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
குறித்த வீதியில் திருத்தப் பணிகள் மார்ச் 05ஆம் திகதி முதல் மார்ச் 08ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இதன் காரணமாக பின்வருமாறு போக்குவரத்து நடவடிக்கைகள் பகுதியளவிலும் முழுமையாகவும் தடைப்படும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 மார்ச் 05 வியாழக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும்.
2026 மார்ச் 06 வெள்ளிக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும்.
2026 மார்ச் 07 சனிக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும். அத்துடன், மு.ப 9.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு (30 நிமிடங்கள்) முழுமையாக மூடப்படும்.
2026 மார்ச் 08 ஞாயிற்றுக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும். அத்துடன், மு.ப 9.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு (30 நிமிடங்கள்) முழுமையாக மூடப்படும்.
இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும், சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்கும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

