Feb 25, 2026 - 12:22 PM -
0
புகழ்பெற்ற ராப் பாடகரான வேடன், தன்னுடைய வீட்டிலேயே எளிமையான முறையில் பதிவுத் திருமணம், செய்துகொண்டார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வந்த பின்னர், அதன் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பேமஸ் ஆனவர்கள் ஏராளம். அப்படி சோசியல் மீடியாவில் தன்னுடைய சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டு, அதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் தான் ராப்பர் வேடன். சமூக அக்கறையோடு, இன்றைய தலைமுறை இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் இவரது பாடல்கள் இருந்ததால், குறுகிய காலத்திலேயே உச்சம் தொட்டார் வேடன்.
யூடியூப் மூலம் பேமஸ் ஆன வேடனுக்கு சினிமாவில் அங்கீகாரம் கொடுத்த படம் மஞ்சும்மல் பாய்ஸ். அப்படத்தில் இவர் பாடிய ராப் பாடல் வைரல் ஹிட் அடித்தது. இதனால் சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தமிழிலும் கடந்தாண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பைசன் காளமாடன் திரைப்படத்திலும் வேடன் பாடி இருந்தார். இவர் சினிமாவில் பாடுவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு சென்று இசைக் கச்சேரிகளையும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், நேற்று (24) திடீரென வேடனுக்கு திருமணம் நடந்து முடிந்தது. ராப்பர் வேடன் என்று அழைக்கப்படும் ஹிரன்தாஸ் முரளியும், எழுத்தாளர் நவமிலதாவும் திருமணம் செய்து கொண்டனர். முளங்குன்னத்துக்காவில் உள்ள வேடனின் வீட்டில் திருமணப் பதிவு நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சாட்சியாக வைத்து திருமணம் நடந்தது. செம்புக்காவு துணைப் பதிவாளர் வீட்டிற்கு வந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
சகோதரர் ஹரி, மனைவி சகோதரர் நவீன், தலித் ஆர்வலர் ஷ்யாம்குமார் ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்திட்டனர். மணமகளின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மாலை 4 மணியளவில் முளங்குன்னத்துக்காவில் உள்ள வேடனின் வீட்டிற்கு வந்திருந்தனர். மாலை பூமலையில் உள்ள ரிசார்ட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சிம்பிளாக திருமணம் செய்துகொண்ட பாடகர் வேடனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

