Feb 26, 2026 - 10:48 AM -
0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை பெற்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் இந்த பிரமாண்ட மைல்கல்லை எட்டிய உலகின் முதல் மற்றும் ஒரே அரசியல் தலைவர் என்ற பெருமையை அவர் இன்று (26) பெற்றுள்ளார்.
பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் தளத்தில் இணைந்தார். கடந்த பத்தாண்டுகளில் தனது அதிகாரப்பூர்வப் பயணங்கள், மக்கள் சந்திப்புகள், சர்வதேச இருதரப்பு உறவுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பகிர்ந்து, இளைஞர்கள் மற்றும் உலக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, உலக அளவிலான மற்ற நாட்டுத் தலைவர்களை விட அவர் பல மடங்கு முன்னிலையில் உள்ளார்:
நரேந்திர மோடி (இந்தியா): 10 கோடி (100 மில்லியன்)
டொனால்ட் ட்ரம்ப் (அமெரிக்கா): 4.32 கோடி (இரண்டாமிடம்)
பிரபோவோ சுபியாண்டோ (இந்தோனேசியா): 1.5 கோடி
லூலா டா சில்வா (பிரேசில்): 1.44 கோடி
ரெசெப் தையிப் எர்டோகன் (துருக்கி): 1.16 கோடி
ஜேவியர் மிலே (அர்ஜென்டினா): 64 லட்சம்
மோடிக்கு அடுத்தபடியாக உள்ள இந்த ஐந்து முக்கிய உலகத் தலைவர்களின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்களின் மொத்த எண்ணிக்கையைச் சேர்த்தால் கூட, அது பிரதமர் மோடியின் தனிப்பட்ட பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைவு என்பது அவரது அபரிமிதமான டிஜிட்டல் செல்வாக்கைக் காட்டுகிறது.
இதேவேளை, பிரதமர் மோடி தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள நிலையிலேயே இந்த சமூக வலைத்தள மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்றைய தினம் இஸ்ரேலிய நாடாளுமன்றமான 'கெனெசெட்'டில் உரையாற்றிய அவருக்கு, இந்தியா-இஸ்ரேல் இடையிலான உறவுகளை வலுப்படுத்தியமைக்காக இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் உயரிய விருதான "கெனெசெட் சபாநாயகர் பதக்கம்" (Speaker of the Knesset Medal) வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

