Feb 28, 2026 - 08:09 PM -
0
புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
எதிர்கால சந்ததியினருக்காக மேற்கொள்ளப்படும் இந்த புதிய கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
முதலாம் தரத்திற்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்த ஜனாதிபதியின் செயலாளர், இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
2026 ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான வேலைத் திட்டங்கள், 2027 ஆம் ஆண்டுக்கான தயார்நிலைகள், கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக 25.01.2026 அன்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களை செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
பாடத்திட்ட அபிவிருத்தி, மனிதவள மேம்பாடு, நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், மதிப்பீட்டு முறை மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டல் ஆகிய துறைகளுக்கான உபகுழுக்களின் நியமனத்தின் தற்போதைய நிலை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
தேசிய, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் கல்வி மறுசீரமைப்பு செயல்முறையை திறம்படச் செய்வதற்காக நிறுவப்பட்ட குழுக்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வுத் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும், தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் ஒழுங்குபடுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தர உறுதிக் கட்டமைப்பு குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

