Mar 1, 2026 - 12:10 AM -
0
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்களின் விசா காலம் 07 நாட்களுக்கு நீடிக்கப்படும் என்றும், அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த வான்பரப்பு ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து விமானப் பயணங்களையும் நேற்று (28) நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் போகும் பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டவர் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் வரை, அவர்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி நாட்டில் தங்கியிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

