Mar 2, 2026 - 04:59 PM -
0
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த வான்பரப்பைத் தவிர ஏனைய அனைத்து வான்வழிப் பயணங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சில வான்பரப்புகள் வரையறுக்கப்பட்ட விமானப் பயணங்களுக்கு மாத்திரமே தற்போது திறக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானப் பயணங்களும் இன்று (02) நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்றைய இரவின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்படும்.
பல்வேறு வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியுள்ள பயணிகளுக்கு விசா உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வரவிருந்த கப்பல்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வருவதற்கு அனுமதி கோரியுள்ள கப்பல்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

