Mar 3, 2026 - 05:50 PM -
0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இன்று மாத்திரம் ஐரோப்பாவில் எரிவாயு விலை 33 வீதத்தாலும், பிரிட்டனில் 30 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.
இது 2023 ஜனவரி மாதத்தின் பின்னர் பதிவான அதிகபட்ச விலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளரான கட்டார் எனர்ஜி நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதால், நேற்றையதினம் எரிவாயு விலை சுமார் 50 வீதத்தால் அதிகரித்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் நிறுவனமான 'Trading Economics' இன் தரவுகளின்படி, இந்த நிலைமை காரணமாக ஐக்கிய இராச்சியம் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
இதற்கு சில முக்கிய காரணங்கள் செல்வாக்கு செலுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்:
எரிவாயு சேமிப்புத் திறன் குறைவாக இருத்தல்.
இறக்குமதியில் அதிகளவாக தங்கியிருக்க வேண்டிய நிலை.
பெப்ரவரி இறுதிக்குள் நாட்டின் உள்ளூர் கையிருப்பு 30 வீதத்திற்கும் குறைவாகக் காணப்படுதல்.
இந்த விலை உயர்வு காரணமாக எதிர்வரும் மாதங்களில் ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் எரிசக்தி செலவுகள் அதிகரிப்பதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஓமானின் 'Duqm' துறைமுகத்திலுள்ள எரிபொருள் தாங்கிகளை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
அதிகாரப்பூர்வமற்ற பாதுகாப்புத் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், உயிர்ச்சேதங்கள் ஏதும் பதிவாகவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், கடந்த வார இறுதியிலும் இதே துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஊழியர் ஒருவர் காயமடைந்திருந்தார்.
இந்த தொடர்ச்சியான தாக்குதல்களால் பிராந்தியத்தின் எரிசக்தித் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வழங்கும் கட்டாரில் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய உள்ளூர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

