Mar 9, 2026 - 09:59 AM -
0
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வெல்வதே தமது அடுத்த இலக்காகும் என இந்திய இருபதுக்கு 20 அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்குப் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிச்சயமாக கடந்த ஒரு மாத பயணம் சிறப்பானதாகும்.
நாங்கள் விரும்பியபடி இது தொடங்கவில்லை என்றாலும், அது விளையாட்டின் ஒரு பகுதிதான். இன்று வரையிலான இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது.
ஒரு அணியாக நாங்கள் எதைச் சாதித்திருக்கிறோம் என்பது இதோ உங்கள் முன்னால் இருக்கிறது. அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
அடுத்த இலக்கு ஒலிம்பிக் தங்கம் மற்றும் நாங்கள் இணைந்து பணியாற்றும் இந்த அணிதான்.
1900-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு, முதல்முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழு கிரிக்கெட்டைச் சேர்த்துள்ளது.
2028 ஜூலை 14 முதல் 29 வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் மோதவுள்ளன.
தற்போதைய ஐசிசி டி20 தரவரிசையின்படி, ஆசியாவிலிருந்து இந்தியா தகுதிபெற உள்ளது.
அனைத்துப் போட்டிகளும் லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள போமோனா நகரில் தற்காலிகமாக அமைக்கப்படும் மைதானத்தில் நடைபெறும்.
இந்திய ஆண்கள் அணி தற்போது செம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் டி20 உலகக் கிண்ணம் ஆகிய இரண்டின் நடப்புச் செம்பியனாகவுள்ளது.
2024-இல் ரோஹித் சர்மா தலைமையில் பெற்ற டி20 உலகக் கிண்ண வெற்றியே ஒரு திருப்புமுனை என்று சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
2024-க்குப் பிறகு அனைத்தும் மாறிவிட்டன. நாங்கள் ஒரு வித்தியாசமான கிரிக்கெட்டை விளையாடினோம்.
அங்கிருந்துதான் இந்த அணி எவ்வாறு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம்.
2025-இல் செம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றோம்.
இப்போது 2026-இல் சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான ஒன்றைச் செய்துள்ளோம்.
இதை 2027, 2028, 2029 எனத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க விரும்புகிறோம் என சூர்யகுமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
