Mar 14, 2026 - 10:21 PM -
0
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் சல்மான் அலி ஆகா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க விதிகளின் முதலாம் நிலையை மீறியுள்ளார்.
வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஐசிசி ஒழுக்க விதித்தொகுப்பின் 2.2 பிரிவை அவர் மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதன்படி, போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள் அல்லது மைதானத்தில் உள்ள பொருட்களை தவறாகப் பயன்படுத்தக்கூடாது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சல்மான் அலி ஆகா இவ்வாறான விதியை மீறிய முதல் சந்தர்ப்பம் இது என்பதால், அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. போட்டி மத்தியஸ்தரிடம் அவர் தனது தவற்றை ஒப்புக்கொண்டதால், இது குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்படமாட்டாது என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39 ஆவது ஓவரில் சல்மான் அலி ஆகா சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார் . அந்த வேளையில் தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, அவர் தனது கை உறைகள் மற்றும் தலைக்கவசத்தை தரையில் வீசினார்.
கள நடுவர்களான ஏட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், தன்வீர் அகமது, மூன்றாவது நடுவர் குமார் தர்மசேன மற்றும் நான்காவது நடுவர் மசூதுர் ரஹ்மான் முகுல் ஆகியோர் இந்த முறைப்பாட்டை முன்வைத்தனர்.
முதலாம் நிலை ஒழுக்க விதி மீறல்களுக்காக குறைந்தபட்சம் உத்தியோகபூர்வ எச்சரிக்கை, வீரரின் போட்டி ஊதியத்தில் அதிகபட்சம் 50 சதவீத அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் தண்டனையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
