Mar 18, 2026 - 12:27 PM -
0
2026 ஐபிஎல் தொடர் வருகிற 28 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்ன நடக்க போகிறது என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தோனி இம்பேக்ட் பிளேயராக விளையாடுவாரா இல்லை முழு நேர வீரராக களமிறங்குவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனியின் தற்போதைய பங்கு என்ன எனவும் வெறும் பெயருக்காக அணியில் இருப்பதை விட பொறுப்புகளை கையில் எடுக்க வேண்டும் எனவும் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எம்எஸ் தோனி 8 அல்லது 9 ஆவது வீரராக களமிறங்கி விளையாடுவதில் தனக்கு துளியும் உடன்பாடு இல்லை. அவர் கேப்டனாகவும் இல்லாத நிலையில், மிகவும் காலதாமதமாக களமிறங்குவது அணியில் ஒரு இடத்தை தவறான காரணங்களுக்காக ஆக்கிரமிப்பது போல் உள்ளது. ஒரு ஜாம்பவானான தோனி அந்த இடத்தில் விளையாடுவது நியாயமே கிடையாது.
தோனி 2026 ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்றால் அவர் கட்டாயம் தனது துடுப்பாட்ட வரிசையில் முன்னேறி வர வேண்டும். அவர் 6 ஆவது இடத்திலோ அல்லது 5 ஆவது மற்றும் 4 ஆவது இடத்திலோ களமிறங்குவதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் குறைந்தபட்சம் 6 ஆவது வரிசையில் ஆட வேண்டும், இல்லையெனில் அணியிலிருந்து விலக வேண்டும்.
கடினமான சூழ்நிலைகளில் அதிக அழுத்தங்களை அவர் ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். சிஎஸ்கே அணியின் எதிர்கால விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்க சஞ்சு சாம்சன் மிகச் சரியான நபராக இருப்பார் என டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
