Mar 26, 2026 - 10:14 AM -
0
சுமார் 10 கோடி ரூபாவிற்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய "குஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு இலங்கை பயணிகள், விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் 'பசுமை வழி' ஊடாக இந்தப் போதைப்பொருளை வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோதே இவர்கள் பிடிபட்டுள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளில் சூட்சுமமாக அமைக்கப்பட்டிருந்த 12 பெக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 10 கிலோ 476 கிராம் எடையுடைய "குஷ்" போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
இதன் மொத்தப் பெறுமதி 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 25 வயதுடைய ஒருவர் துணிக்கடை ஊழியர் என்பதும், 26 வயதுடைய மற்றவர் சாரதி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இந்தப் போதைப்பொருளைக் கொள்வனவு செய்த இவர்கள், பின்னர் இந்தியாவின் புதுடெல்லிக்குச் சென்று அங்கிருந்து AI-3203 ரக விமானம் மூலம் இன்று அதிகாலை 5.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேக நபர்களும் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
