Mar 26, 2026 - 01:33 PM -
0
'டித்வா' புயலின் பாதிப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் நிறுவப்பட்டது.
அலரி மாளிகையின் 'நெலும்' கட்டிடத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, அந்தந்த அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சுகாதார அமைச்சின் வைத்தியர் என அனைத்துத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதிகாரிகள் இவ்வலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாகாணச் செயலாளர்கள் ஊடாகத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகளை முன்வைக்க 1904 என்ற அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்:
"பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் நிறுவப்பட்டது. இதற்குத் தடையாக இருக்கும் நபர்கள் இருப்பார்களாயின், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவர்களின் சொத்துக்களை முழுமையாகவோ அல்லது தற்காலிகமாகவோ கையகப்படுத்தவும், சிறைத்தண்டனை வழங்கவும் அதிகாரம் உள்ளது. எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்ட ஒரு பேரிடர் சூழலிலேயே இது நிறுவப்பட்டதால், நாம் வழங்கிய உத்தரவுகளை அதிகாரிகள் அவ்வாறே நடைமுறைப்படுத்தினர். இதனால் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை," எனத் தெரிவித்தார்.
