Mar 27, 2026 - 03:46 PM -
0
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 11 ஆவது சீசன் நேற்று (26) முதல் ஆரம்பமாகியது. ஆரம்ப போட்டியே ஒரு வினோதமான சர்ச்சையுடன் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லாகூர் கலாண்டர்ஸ் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டிகளுக்கு இடையே வெள்ளை நிறப் பந்து திடீரென சிவப்பு நிறமாக மாறியது வீரர்களையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
போட்டி ஆரம்பித்த 2 ஆவது ஓவரிலேயே, ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லெபுசேன் கள நடுவர்களிடம் பந்தைக் காட்டி முறையிட்டார். வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டிய 'கூக்கபுரா' (Kookaburra) பந்து, அடர் சிவப்பு நிறமாக மாறத் தொடங்கியதே இதற்குக் காரணம்.
இது குறித்து லெபுசேன் தெரிவிக்கையில்,
"இரண்டாவது ஓவர் முடிந்ததும் நான் நடுவர்களிடம் கேட்டேன், இங்கே என்ன நடக்கிறது? பந்து சிவப்பாக மாறிவிட்டது. வீரர்களின் உடையில் இருந்துதான் அந்த சாயம் பந்திற்குப் பரவுகிறது என்று நினைக்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை" எனத் தெரிவித்தார்.
ஐதராபாத் கிங்ஸ்மேன் அணியின் புதிய சீருடை மற்றும் துடுப்பாட்ட மட்டைகளில் பயன்படுத்தப்பட்ட மெரூன் நிறச் சாயம், பந்தில் ஒட்டிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஆட்டத்தின் 15 ஆவது ஓவரில் பந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு சரியாகத் தெரியாத அளவுக்கு நிறம் மாறியதால், நடுவர்கள் வேறு வழியின்றி புதிய பந்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. பல ரசிகர்கள் இது "பி.எஸ்.எல் வரலாற்றின் முதல் பிங்க் பால் டி20 போட்டி" என கிண்டல் செய்து வருகின்றனர். ஐதராபாத் கிங்ஸ்மேன் அணி நிர்வாகம், அடுத்த போட்டிக்குள் தங்களது சீருடையின் தரத்தை சரிசெய்வதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
