Apr 1, 2026 - 08:41 AM -
0
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என அந்தச் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
"சுகாதார அமைச்சர் தனது அரசியல் பிம்பத்தை மெருகேற்றிக் கொள்வதற்காக, பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியலை முழுமையாகத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றார். கஷ்டப் பிரதேசங்களுக்கான இடமாற்றப் பட்டியல் முழுமையாக விகாரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் நாட்டில் சுமார் 150 கஷ்டப் பிரதேச வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எவ்விதத் தயார்நிலையும் இல்லை. அதேவேளை, சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி தவறான தகவல்களையும் தரவுகளையும் புள்ளிவிபரங்களையும் மிகவும் பெருமையுடன் முன்வைப்பதைப் பார்க்க முடிகிறது. இது அவர் ஒரு சுகாதார அமைச்சராக இருந்தும் அவருக்குள்ள அறியாமையையே வெளிப்படுத்துகின்றது."
