Apr 1, 2026 - 03:00 PM -
0
கற்பிட்டி - குடாவ கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக எமது நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கடற்படையினர் நேற்று (31) கைப்பற்றினர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கற்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் நேற்று (31) நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான 13 பொதிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதன் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 170 கிலோகிராம் முந்திரி பருப்புகள், 180 சவர்காரக்கட்டிகள், 90 கிலோகிராம் ஏலக்காய், பூச்சிக்கொல்லி திரவம் நிரப்பப்பட்ட 169 சிறிய போத்தல்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அடங்கிய 90 சிறிய பொதிகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
இலங்கையின் பல பாகங்களுக்கும் விற்பனை நோக்கத்திற்காக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட குறித்த பொருட்கள், கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்கும் கடற்படையின் தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணமாக, கடத்தல்காரர்களால் இந்தப் பொருட்களை கரைக்குக் கொண்டுவர முடியாமல், அவற்றைக் கடற்கரையோர பகுதியிலேயே கைவிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பொருட்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.
--
