Apr 3, 2026 - 04:21 PM -
0
இம்முறை யால பருவச் செய்கைக்காக விவசாய நிலங்களுக்கு நீரை விடுவிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் இது குறித்துத் தெரிவிக்கையில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 76% ஆகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக நாடு முழுவதிலும் உள்ள 376 நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் சுமார் 8,00,200 ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர் விநியோகிக்கப்படுவதாகவும், இம்முறை யால பருவத்திற்காக அந்த மொத்த நிலப்பரப்பில் 6,97,800 ஏக்கரில் பயிர்ச் செய்கை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் 6,51,000 ஏக்கரில் நெற்செய்கையும், 46,800 ஏக்கரில் மேலதிகப் பயிர்ச் செய்கையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்காக நீரை விடுவிப்பதில் எவ்விதத் தடையும் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது பிரதான நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் நிலம் தயார்படுத்தல் மற்றும் பயிர் நடுகைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் முதலாம் திகதியளவில் 205 பிரதான நீர்ப்பாசனத் திட்டங்களில் நிலம் தயார்படுத்தல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 75 விவசாய நிலங்களில் தயார்படுத்தல் பணிகளை முடித்து பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும், ஏனைய நீர்ப்பாசனத் திட்டங்களின் யால பருவப் பணிகளைப் புத்தாண்டுக்குப் பின்னர் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போது நிலவும் கடும் வறட்சியான வானிலையினால், நிலம் தயார்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார். அதிக வெப்பமான காலநிலை காரணமாக நீர் ஆவியாதல் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, நிலம் தயார்படுத்தல் பணிகளுக்குத் தேவையான அளவு நீரை மாத்திரம் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.
நீர் முகாமைத்துவக் குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்கள் நீர் விநியோகம் தொடர்பாக எடுக்கும் தீர்மானங்களின்படி செயற்படுவது அவசியமாகும். விவசாயிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் நீர் முகாமைத்துவத்தை வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் மூலம், யால பருவத்திற்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதுடன், குடிநீருக்காகவும் எதிர்காலப் பருவத்திற்காகவும் நீரைச் சேமிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
