Apr 6, 2026 - 05:11 PM -
0
IPL 2026 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி நேற்று (05) நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், அடுத்த போட்டியில் நட்சத்திர வீரர் விளையாடுவார் என்ற தகவலை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி பெங்களுரூவில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியின் டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ஓட்டங்களை எடுத்து அசத்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட மிக அதிகமான ஸ்கோர் என்ற சாதனையையும் இந்த மேட்ச்சில் ஆர்சிபி அணியினர் ஏற்படுத்தினர்.
251 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை சேஸிங் செய்த சென்னை அணியால் 207 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
சென்னை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான சஞ்சு சாம்சன் 9 ஓட்டங்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ஓட்டங்களிலும், ஆயுஷ் மாத்ரே 1 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 14 கோடி ரூபா கொடுத்து வாங்கப்பட்ட கார்த்திக் சர்மா 6 ஓட்டங்களை எடுத்தார். இந்த தொடரில் ஹாட்ரிக் தோல்வியை சென்னை அணி அடைந்துள்ளது.
இப்படி முன்னணி வீரர்கள் ஏமாற்றம் அளித்ததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் பந்து வீச்சும் பலவீனமாக உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் அடைந்திருப்பது மிகப்பெரிய தோல்விதான். இருப்பினும், நாங்கள் வெற்றிப் பாதைக்கு திரும்ப கடுமையாக முயற்சிப்போம்.
அடுத்த போட்டிக்கு இடையே இன்னும் 5 நாட்கள் உள்ளன. நாங்கள் திட்டமிட்டபடி அனைத்தும் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். காயத்திலிருந்து டெவால்ட் பிரேவிஸ் குணம் அடைந்து வருகிறார். அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.
